செவ்வாய், 3 மே, 2011

வெளித்தெரியா வெள்ளிகள் - 01



kalankal-01-smallஇதுவொரு காலத்தின் பதிவு. ஆங்கிலத்தில் நூலாக வெளிவரவிருக்கின்ற இப்பதிவின் தமிழ்ப்பதிப்பு தொடராக ஈழநேசனில் வெளிவருகின்றது. தமிழீழ விடுதலைக்காக புறப்பட்ட ஒருவனின் வாழ்க்கையோடு பயணிக்கும் இப்பதிவு - ஒரு சிறுமுயற்சியே. தாயகத்தமிழர்களின் வேதனைகளும் வலிகளும் அவர்களது தியாகப்பயணமும் இன்னும் தொடரும் நிலையில் வெளிவருகின்ற தொடர்பதிவு இதுவாகும். தமிழிலக்கிய பரப்பில் ஈழத்துபோராட்ட இலக்கியமும் முக்கியமானது என்ற வகையில் இதனை வெளியிடுகின்றோம்.

--------------------------------------------------------------------------------------------------------------------------

”அம்மா நான் ஒருக்கா லைப்ரரிக்கு போட்டுவாறன்” எனச்சொன்ன கீதன் தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட ஆயத்தமானான்.

”ஒரே வெயிலாக்கிடக்கு இப்ப என்ன அவசரம்” என்ற அம்மாவின் குரலுக்கு ”இல்லை பேப்பர் பாத்திட்டு வாறன்” என்றவன் சைக்கிளுக்கு காற்று இருக்கின்றதா எனப்பார்த்தான்.

”கொண்ணை இப்பதானே பேப்பர் வாங்கிக்கொண்டுவந்தவன்”.

”இல்லை நேற்றைய பேப்பர் ஒருக்கா பார்க்கவேணும். உடன வந்திடுவன்” என்று சொல்லியவாறே சைக்கிளில் ஏறிவிட்டான்.

”சரி அப்ப வரக்க, கடையில் சீனி அரை கிலோ வாங்கிக்கொண்டு வா. தேத்தண்ணி போடுறதுக்கு கூடு ஒண்டும் இல்ல” என அம்மா அவனது கையில் காசை திணித்தபோது, ”இல்லை பின்னேரம் வாங்கலாம்” எனச் சொல்லியவாறே சென்றான்.

அப்பிடி என்ன அவசரமாய் போறான் என நினைத்தவள், பின்னால கூப்பிடக்கூடாது என நினைத்தாள் போலும் பேசாமல் இருந்துவிட்டாள். அவனோடு இனிப்பேச பல வருடங்கள் ஆகும் என்பதை அவள் அன்று அறிந்திருப்பாளா?


அப்போது யாழ்குடாநாடு போர் மேகம் சூழ்ந்திருந்த நேரம். யாழ் குடாநாட்டின் தீவுப்பகுதிகளை கைப்பற்றிய இராணுவத்தினர் யாழ் குடாநாட்டை முழுமையாக கைப்பற்ற முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

குடாநாட்டிற்கான வெளித்தொடர்புகள் துண்டிக்கப்பட்டதுடன் போக்குவரத்து பாதைகளும் முடக்கப்பட்டுவிட்டன. இப்போது பலாலி பெருந்தளத்திலிருந்து இராணுவத்தினர் முன்னேறிக்கொண்டிருந்தார்கள்.

kalankal-02பாதுகாப்பான இடங்கள் எதுவும் இருக்கவில்லை. நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தின் மீது குண்டுவீச்சு விமானங்கள் பதிந்தபோதும் அத்தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தமாட்டார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. அவ்வளவு பெருந்தொகையில் மக்கள் குவிந்திருந்தார்கள். வீதிகள் நிரம்பியிருந்தன. ஆனாலும் அந்தக்கொடிய விமானங்கள் 200 இற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களை கொன்றுபோட்டிருந்தது.

இனி ஒன்றும் செய்யமுடியாது என்பது தெரிந்து, ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தாம் வாழ்ந்த அம்மண்ணிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்தார்கள். இவனது நண்பர்கள் அனைவரும் ஒவ்வொரு திசையில் பிரிந்து எங்கே சென்றார்கள் என்பது தெரியவில்லை.

பக்கத்துவீட்டு வேலி தங்கட காணிக்குள் சாய்ந்துவிட்டது என்பதற்காகவே வழக்கு போட்ட மக்கள் - தங்கள் மண்ணே பறிபோகின்றது என்று தெரிந்தும் ஒன்றும் செய்யமுடியாதவர்களாக வெளியேறிக்கொண்டிருந்தார்கள்.


வாழ்வா சாவா என்ற கட்டத்தில் இவனுக்கு முன்னால் ஒரு தெரிவே இருந்தது. அந்த வழியில் பயணிக்க கீதன் முடிவெடுத்திருந்தான். ஒன்றன்பின் ஒன்றாக படகுகள் இணைக்கப்பட்டு ஏறக்குறைய நானூறு பேர் பயணித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களின் அப்போதைய பயணத்தைப்போலவே தொடரப்போவதும் பெரும் சவாலானதுதான் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.

கடற்பயணத்தை பாதுகாப்பதற்காக ”எங்கட பெடியள்” நிற்கிறார்கள் என்ற பாதுகாப்புடன் அப்பாதையால் மக்களும் பயணித்துக்கொண்டிருந்தார்கள்.

அந்தப்பாதையை காத்துநின்ற அந்த வீரர்கள் பற்றியும் அவன் அறிந்திருந்தான். ஆனால் தன்னோடு பயணிக்கும் தோழர்களும் அவ்வாறு தற்கொடையாளர்கள் ஆவார்கள் என்பது அப்போது அவனுக்கு தெரிந்திருக்கவில்லை.

அது யாழ்குடாநாட்டை வன்னி பெருநிலத்திலிருந்து பிரித்த கடல் நீரேரி. அப்பாதையால் பயணிக்கும் எவரும் படையினரால் குறிவைக்கப்படுவார்கள். ஆனால் அவர்களை காப்பதற்காக காவல்தெய்வங்கள் கண்ணயராமல் கடலினில் நிற்பார்கள்.

அக்கடற்பாதையை பொதுமக்கள் பயன்படுத்துவதை தடுப்பதற்காக படையினர் மேற்கொண்ட ஒவ்வொரு கொடுமைகளும் அதனை எதிர்த்து அவர்கள் செய்த தியாகங்களும் மக்கள் மத்தியில் இனம்புரியாத தேசிய உணர்வை வளரச்செய்தது.


அம்மா அப்பா சகோதரர்கள் என அவர்கள் ஒன்றாக வாழ்ந்த காலங்கள் குறைவு. சிறுவயதிலே தொடர்ந்த இடப்பெயர்வுகள் அவனது குடும்பத்தையும் சிதறச்செய்தது. அதனால்தான் சேர்ந்திருந்த அந்தக்காலங்கள் காணாமல்போய்விடக்கூடாது என்ற எண்ணம் அவனிடம் இருந்தது. ஆனால் அவர்கள் அவனை விட்டு பிரிந்துவிடக்கூடாது என்பதற்காக தனது கடமையை அவன் உணர்ந்திருந்தான் போலும்.

காலைப்பயிற்சிகள் கடுமையாக இருக்கும். வெள்ளிக்கிழமை என்றால் இன்னும் கடுமையானதாக இருக்கும். காலையில் ஏழு மணிக்கு எழும்பியவனுக்கு பயிற்சிக்காலங்களில் நாலரை மணிக்கு ஊதும் விசில் பழகிப்போனது ஆச்சரியமானதுதான்.

போராட்டம் கடுமையானது. அதற்கு துணிவு தந்திரம் கடும்பயிற்சி தேவை. பயிற்சி ஆசிரியர்கள் திரும்ப திரும்ப கூறுவார்கள். அதனால்தானோ என்னவோ தன்னை மாற்றிக்கொள்ள அவன் விரும்பினான்.

இப்போது அவனாகவே கடுமையான சூழலில் வாழ விரும்பினான். காலையில் அகவணக்கம் செய்யும்போது திலீபனை பூபதி அம்மாவை கிட்டண்ணைாவை மனதில் நினைந்துகொள்வான். அவர்களை போன்ற உறுதியுடன் தானும் பயணிக்கவேண்டும என திடம்கொள்வான்.

காலை தொடக்கம் இரவு வரை கடும்பயிற்சி. இரவுகளில் தொடரும் உடனடி காப்பு பயிற்சி.

தன்னோடு நின்ற பல தோழர்கள் எவ்வளவு கடினப்பட்டு இதனை செய்கின்றார்கள் என்று எண்ணும்போது தானும் தனது பங்கை நிறைவுசெய்துவிடவேண்டும் என்ற துடிப்பு அவனிடம் இருந்தது.


kalankal-03மேஜர் ரஜீவன் அண்ணா தான் பயிற்சிமுகாம் பொறுப்பாளர். அமைதியான அந்த உருவத்திற்குள் அடங்கியிருந்த ஆளுமையை கண்டு பலதடவை வியந்திருக்கின்றான்.

பொதுவாழ்வுக்காக அர்ப்பணித்தவர்களின் வாழ்க்கை எவ்வளவு வித்தியாசமானது என்பதை அவரோடு பழகினாலே அறிந்துகொள்ளமுடியும்.

போராளிகள் உண்மையானவர்களாகவும் நம்பிக்கையானவர்களாகவும் சமூகசிந்தனையுடையவர்களாகவும் இருக்கவேண்டும் என்பதிலும் கவனம் செலுத்துவார்.

அவர் ஆனையிறவு ஆகாய கடல் வெளி சமரில் காயமடைந்திருந்தார். அதன் பின்னர் நிர்வாகப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். யாழ்குடாநாடு முழுவதுமாக அரசபடைகளால் கைப்பற்றப்பட்ட நிலையில் அங்கு சென்று சண்டை செய்யப்போவதாக கேட்டு தலைவருக்கு கடிதம் எழுதுவார்.

அவ்வாறு அனுமதிபெற்று யாழ்ப்பாணம் சென்று நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது - மாவீரர் நாளில் துயிலுமில்லத்தில் விளக்கேற்றவேண்டும் என்ற துடிப்போடு சென்று விளக்கேற்றிவிட்டு திரும்பிவரும்வழியில் வீரச்சாவடைந்திருந்தார்.

8888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888

கீதனது பயிற்சி முகாமில்தான் லெப்கேணல் சுபேசன் அண்ணனின் அணியும் தங்கி விசேட பயிற்சி ஒன்றில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்கள் கரும்புலிகள் அணியை சேர்ந்தவர்கள் என்பதை அறிந்து அவர்களை நேரடியாகவே முதற்தடவையாக கண்டபோது தியாகத்தின் உச்சங்களின் முகங்களை தரிசித்தான்.

அவர்கள் ஆங்கில படங்களில் வருவது போன்றமாதிரியான பயிற்சிகளிலேதான் ஈடுபட்டுக்கொண்டிருப்பார்கள். ஏழுபேர் கொண்ட அணியாக மட்டுமே அவர்களது பயிற்சி போய்க்கொண்டிருந்தது.

கீதனுடன் ஏறக்குறைய முன்னூறு பேரளவில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களுடைய பயிற்சிகள் தொடக்கநிலைபயிற்சிகளாக மட்டுமே அவை அமைந்திருந்தன.

சிறப்பு பயிற்சிகள் பெற்றுக்கொண்டிருந்த சுபேசன் அண்ணனின் அணியோ எங்கோ விமானதளத்தை தாக்குவதற்கான பயிற்சிகளை பெற்றுக்கொண்டிருந்தார்கள். அது பலாலியா கல்குடாவா அல்லது திருமலையா என யோசித்துக்கொண்டிருப்பான். அப்போது கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் பற்றி யோசிக்கமுடியாத காலம்.

ஆனால் பின்வந்த நாட்களில் ஆட்லறிதளம் ஒன்றை தாக்குவற்கான பயிற்சியாக மாற்றம் பெற்றது. அவர்களது பயிற்சிகள் அனைத்தும் ஒத்திகை பயிற்சிகளாகவே இருந்ததன. ஆனால் காலவோட்டத்தில் தாக்குதல் திட்டங்கள் மாறி இடங்கள் மாறிக்கொண்டேயிருக்கும்.

இவ்வாறு இலக்குகள் மாறி இடங்கள் மாறிக்கொண்டிருந்த போதிலும் தங்கள் விடுதலைக்கான விலையை மாற்றாமல் உறுதியாக நின்ற இவர்கள் சுமார் ஆறுவருட காத்திருப்புக்கு பின்னர் ஆனையிறவில் மூச்சடங்கிப்போனார்கள்.

ஓரு கணத்திலே வெடித்துப்போகின்ற இவர்களின் இறுதிக்கணங்களை - காத்திருந்து தமது பணியை முடிக்கும் சகிப்புத்தன்மையை - அதற்காகவே கடுமையான பயிற்சிகளை பெற்றுக்கொள்கின்ற அவர்களது முயற்சிகளை – எப்படி எழுதமுடியும்.

”நான் கம்பிவேலியை உடைக்க வெடிக்கிறன். அந்தப்பாதையால் போய் நீங்கள் முதலாவது காவலரணில வெடியுங்கோ. மற்ற ஆட்கள் ஆட்லறியை வெடிக்கவைக்கலாம்” என தாங்களே திட்டமிட்டுகொள்ளும் இவர்களுக்குள் உள்ளே புகுந்துகொண்ட அந்த மனவுறுதி எப்படி அவர்களுக்கு உருவானது.

majo-aasha

ஆனையிறவு ஆட்லறி தாக்குதலுக்காக திட்டமிட்டுக்கொண்டிருக்கும்போது வரைபடத்தின்மீது இருந்துகொண்டு ”நான் இந்த பிப்ரி கலிபரை விடமாட்டன். அதை உடைக்கமுதல் அதை எடுத்து அவனுக்கே திருப்பி அடிப்பன்” மேஜர் ஆஷா சொன்னபோது அவனால் அவர்களை புரிந்துகொள்ளமுடியவில்லை.

வெடிப்பது சார்ஜரை இழுப்பது என இயல்பாக சொல்லும் இவர்கள் தங்கள் உயிரை பற்றி ஒருகணமேனும் சிந்திப்பதில்லை. ஏனென்றால் தாங்கள் வீரச்சாவு அடைவதற்கு முன்னர் எத்தனை எதிரிகளை கொன்றோம் எத்தனை எதிரியின் போர்த்தளபாடங்களை அழித்தோம் என்பதில்தான் அவர்கள் இலக்கு இருந்தது. அவர்களுக்குள் புதைந்திருந்த அந்த ஆன்மஉறுதியை கண்டு இவன் மெய்சிலிர்த்துப்போனான்.


யாழ் குடாநாடு இடப்பெயர்வின்போது வன்னிப்பெருநிலம் எங்கும் ஓலைக்குடிசைகளே நிரம்பிநின்றன. அடுத்தடுத்த இடப்பெயர்வுகளே எம்மக்களின் வாழ்வை அவலநிலைக்கு கொண்டுசென்றது.

ஓலைக்குடிசைகளில் ஆங்காங்கே தெரியும் உறவுகளை காணும்போது இவர்களுக்காக என்றாலும் நாம் போராடவேண்டும் என்ற உறுதி இன்னும் அதிகரிக்கும்.

ஆறு மணிக்குப்பின்னர் வீதியை மறித்து படுத்திருக்கும் அந்த ஊர் மாடுகள் வாகனங்களுக்கு வழிவிடாமல் தங்கள் பாட்டில் படுத்திருக்கும். இரவு வந்துவிட்டால் தங்களுக்கே வீதி சொந்தம் என எண்ணுகின்றன போலும்.

மாடுகளை பொதுவாக ஐந்தறிவுள்ள பிராணிகள் என சொல்ல கேள்விபட்டிருக்கின்றான். ஆனால் அவற்றுக்குள்ளே இருக்கின்ற ஒட்டுறவை கண்டு பிரமித்துப்போயிருக்கின்றான்.

ஒரு தடவை வழங்கல் சாப்பாடு சலித்துப்போன நிலையில் மாடு அடிப்போம் என கீதனுடன் இன்னும் மூன்றுபேர் வவுனியாவின் எல்லைப்புற கிராமம் ஒன்றுக்கு சென்றார்கள்.

அங்கு காட்டெருமைகள் என்று சொல்லக்கூடிய மாதிரி ஊர்மாடுகள் காடு ஏறி வாழ்ந்துவந்த நேரம் அது. ஒரு கூட்டம் மாடுகளை கண்டு அவற்றில் ஒரு நாம்பன் மாட்டை குறிவைத்து சுட்டான் கீதன். ”கீதன் நீ பக்கத்தில் நிண்ட மாட்டை சுட இந்த மாட்டுக்கு பட்டுட்டுதடா” என வேந்தன் நக்கலடித்தான்.

வேந்தன் எப்பவுமே கலகலவென்று எதையாவது சொல்லி மற்றவர்களை சிரிக்கவைத்துக்கொண்டிருப்பான். மேடைநிகழ்ச்சிகளில் எப்போதும் அவன் வந்ததாகவே ஞாபகம். அவனோடு சம்பந்தப்பட்ட இன்னொரு நிகழ்வை பின்னொரு பொழுதில் பார்ப்போம்.

அந்த மாடு சூடுபட்டு கீழே விழப்போனபோது ஒரு கணம் கிலி கொண்ட மாடுகள் சுதாகரித்து – கீழே விழுந்த மாட்டை கீழே விழாமல் தள்ளிக்கொண்டு செல்லமுயற்சித்தன. அதுமுடியாமல் போகவே அந்த மாட்டை விட்டுவிட்டு மற்றையவை காட்டுக்குள் ஓடின.

அதுவரை நாளும் மாடுகள் தானே நினைத்தவனுக்கு அந்நிகழ்ச்சி நெகிழ்ச்சியை உருவாக்கியது. மிருகங்களுக்குள் இருக்கும் அன்னியோன்னியம் கூட மனிதர்களுக்குள் இல்லாமல் போய்விடுகின்றதே.



வியாழன், 21 ஏப்ரல், 2011

விடுதலைப் புலிகளின் மகளீர் படைப் பிரிவின் தோற்றமும் வளர்ச்சியும் எழுச்சியும் எமது இயக்கம் படைத்த மாபெரும் சாதனைகளில் ஒன்று. ஒரு புதுமைப் பெண்ணை, புரட்சிகரப் பெண்ணை எமது விடுதலை இயக்கம் படைத்திருக்கிறது. இந்த முகவுரை விதுசா பற்றிய நினைவுப் பகிர்வை அறிமுகஞ் செய்யப் போதுமானது.

குருக்கள் கந்தையா, ஞனாம்பிகை இணையருக்கு ஞானபூரணி என்ற இயற்பெயர் பூண்ட விதுசா மூத்த மகளாக 1969 செப்ரம்பர் 29ம் நாள் கரவெட்டி கப்புதூவில் பிறந்தார்.

இவர் தனது பதின்ம வயதில் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரம் வர்த்தகப் பிரிவில் படிக்கும் போது புலிகள் இயக்கத் தொடர்பு ஏற்பட்டது.

இக்காலப் பகுதியில் அவர் விடுதலைப் புலிகளின் பகுதி நேரப் பணியாளராக இணைந்தார். 1986 மே மாதத்தில் விடுதலைப் புலி உறுப்பினராக இணைந்தார். அப்போது அவருக்கு வயது 17. அவர் வாழ்ந்த காலம் 40 வருடம். வீரச்சாவடைந்த நாள் 2009 ஏப்ரல் 04ம் நாள்.

2001-2009 காலத்தில் அவரோடு நெருங்கிப் பழக நேர்ந்தது. அவருக்கு இலக்கிய தாகம், உலக நிகழ்வுகளை நகர்த்தும் அடிப்படைகள் பற்றிய ஆர்வம், இராணுவத் தொழில்நுட்பத் தகவல்கள் திரட்டும் வேட்கை என்பன மிகுதியாக இருந்தன.

உயர் கல்வி கற்றுத் தேறவில்லை என்ற ஏக்கமும் இருந்தது. இயக்கத்தில் இணைந்த சிறிது காலம் அவர் சுதந்திரப் பறவைகள் பிரிவில் இருந்தபடி கிராம ரீதியாகக் கருத்தூட்டல் பணிகளில் ஈடுபட்டார். உற்ற தோழிகளான லெப் நித்தியா பவானி, மேஜர் சஞ்சிகா கலை ஆகியோர் இந்தப் பிரிவின் சுகாதரப் பணிகள், எழுச்சிக் கருத்தரங்குகள் ஆகியவற்றை அவருடன் நடத்தினர்.

விடுதலைப்புலிகள் மகளீர் 2ம் அணியில் விதுசா ஆயுதப் பயிற்சி பெற்றார். 1987ல் சிங்கள இராணுவம் நடத்திய ஒப்பரேசன் லிபரேசன் என்ற வடமராட்சியைக் கைப்பற்றும் நடவடிக்கையில் அவர் தனது போராட்ட வாழ்வைத் தொடங்கினார். இந்தியப் படைகள் வந்தபோதும் அவற்றிற்கு எதிரான கோப்பாய்ச் சமரில் அவர் முக்கிய பங்கேற்றார். இதன் போது முதலாவது பெண் மாவீரர் மாலதி 10.10.1987ம் நாள் வீரச்சாவடைந்தார். அதன் பிறகு புலிகள் மேற்கொண்ட தந்திரோபாயப் பின்வாங்கலில் வன்னி நிலத்திற்குச் சென்றார்.

எம் தலைவர் அவர்கள் வழிகாட்டலில் பெண் போராளிகளுக்குப் பயிற்சி வழங்கும் பணியில் வன்னியில் ஈடுபட்டார். பலவீனமான எமது இனத்தின் பலமான பாதுகாப்பு அரணாக அவர் பெண் போராளிகளை உருவாக்கினார்.

1988ம் ஆண்டுப் பிற்பகுதியில் யாழ் சென்ற மகளீர் அணியுடன் விதுசா சென்றார். யாழ் குடா முழுவதும் இந்திய இராணுவம் செறிவாக நின்ற காலமாயினும் அவரும் தோழிகளும் புதிய பெண் போராளிகளை இணைப்பதில் தீவிரமாக ஈடுபட்டனர். பொறுப்புக்களைச் சுமக்கும் தகுதி பெற்ற அவர் 3ம், 4ம் மகளீர் அணிகளை உருவாக்கி அவற்றை வன்னிக்கு வழிநடத்திச் சென்றார். அங்கு களமுக அடிப்படைப் பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றினார். விடியல் பாசறையின் பொறுப்பாசிரியராக அவர் தனது ஆளுமையை வெளிப்படுத்தினார்.

2ம் கட்ட ஈழப்போர் தொடங்கிய பிறகு கொக்காவில் படை முகாம் தாக்குதலில் பங்கேற்ற விதுசா காலில் காயமடைந்தார். தேறியபின் ஆனையிறவு, யாழ் கோட்டை, பலாலி இராணுவ முகாம்களைச் சுற்றிக் காவல் பணி செய்தார். 1990 கார்த்திகையில் நடந்த தச்சன்காடு மினி முகாம் தாக்குதலில் நெடுநாட் தோழி மேஜர் சஞ்சிகா கலை வீரச்சாவடைந்தார்.

இந்தப் இழப்பு அவரைப் பலமாகத் தாக்கியது. அதை எண்ணும் போது என் இதயம் வெடித்துவிடும் போல் இருக்கும் என்று அவர் சொன்னார்.

1991ல் நடந்த ஆனையிறவுச் சமரில் மாதர் அணியின் ஒரு பகுதித் தளபதியாயகப் பதவி உயர்ந்தார். அவருடைய திறமைக்கு தலைவர் அவர்களின் பாராட்டுக்கள் கிடைத்தன. தலைவரின் சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுப்பதில் வல்லவர் என்ற சிறப்பைப் பெற்றார்.

தலைவர் அவர்களின் இலட்சியக் கனவான தமிழீழ உருவாக்கத்திற்கு அவர் அல்லும் பகலும் உழைத்தார். அவருக்கு சொந்த வாழ்க்கையின் எதிர்காலம் பற்றிய சிந்தனை இருந்ததில்லை “அண்ணையின் கனவை நிறைவேற்றுவது” ஒன்று தான் அவருடைய வாழ்க்கைக் குறியாக இருந்தது.

மகளீர் அணியின் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்ட விதுசா 1992 கார்த்திகையில் இடம் பெற்ற பலாலி 180 காவலரண் தாக்குதலில் காலிலும் தலையிலும் விழுப்புண் அடைந்தார். அறிவிழந்தாலும் கட்டளைகளைப் பிறப்பித்தபடி இருந்ததாக அவர் பிற்காலத்தில் சொன்னார்.

1993நவம்பர் 10-13ல் நடந்த பூநகரி ஒப்பரேசன் படை நடவடிக்கையில் அவர் பிற்களப் பணியில் ஈடுபட்டார். அதே வருடம் முதலாவது பெண் மாவீரர் மாலதியின் பெயரில் உருவாக்கப்பட்ட மாலதி படையணியின் கட்டளைத் தளபதியாக கேணல் என்ற பதவியோடு நியமிக்கப்பட்டார்.

சந்திரிக்கா அரசின் சமாதனத்திற்கான போர் அடுத்த வருடம் தொடங்கிய போது தலைமைப் பொறுப்பேற்று மாலதி படையணியை வழி நடத்தினார்.

அவருடைய களப் பயணம் 1993 தொடக்கம் வீரச்சாவடையும் 2009 வரை ஒரு போதும் ஓய்ந்ததில்லை. யாழிலும் சரி வன்னியிலும் சரி எண்ணற்ற சமர்களில் பங்காற்றினார். இதயபூமி, இடிமுளக்கம், இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிர்ச்சமரை வழிநடத்தியதோடு புலிப்பாய்ச்சல் ஆகியவற்றில் திறம்படச் செயற்பட்டார்.

யாழ் தீபகற்பத்தை சிங்கள இராணுவம் கைப்பற்றுவதற்கு நடந்த சூரியக்கதிர் சமரில் அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. புலிகளின் போராட்ட வரலாற்றில் மிக நெடிய காலம் தொடர்ந்த ஜெயசிக்குறு எதிர்ச்சமரிலும் அவர் அரும்பணியாற்றினார். 1998ல் ஓயாத அலை 2 படை நடவடிக்கையில் முக்கிய பங்கேற்ற அவர் கிளிநொச்சி புலிகள் வசம் வீழ்ந்த போது தேசியக் கொடியை களத்தில் அவரே ஏற்றினார். இது அவருடைய போராட்ட வாழ்வின் உச்சமாகக் கருதப்படுகிறது.


1999 செப்ரம்பர் 18ம் நாள் அவர் தனது இளைய சகோதரன் போராளி விதுசன் கேதீஸ்வரனைக் களத்தில் இழந்தார். ஓயாத அலை 3, தீச்சுவாலை முறியடிப்புச் சமர் ஆகிய வற்றில் அவருடைய வழி நடத்தல் பிரமிப்பூட்டும் விதத்தில் அமைந்தன. சிங்கள இராணுவத்திற்கும் எமக்கும் இடையில் 2008 தொடக்கம் 2009 வரை நடந்த சமச்சீரற்ற போரில் தம்பனையில் இருந்து ஆனந்தபுரம் மந்துவில் வரை விதுசா ஓய்வின்றிக் களமாடினார். உணவின்றி உறக்கமின்றி எதிரியை விரட்டி அடிப்பதில் குறியாக இருந்தார்.

2009 சனவரி 26ம் நாள் அவரை சந்திக்க நேர்ந்தது. உடல் மெலிந்து கண்கள் குழிவிழுந்தாலும் உறுதி தளராமல் இருந்தார். எதிரிகளின் சூழ்ச்சியால் ஆனந்தபுரம் சமரில் வீரச்சாவடைந்தார். அவருக்கு பிரிகேடியர் பதவி வழங்கப்பட்டது. அவருடைய வித்துடலைப் பார்க்காமல் விதை குழியில் ஒரு பிடி மண் போடாமல் இருக்கும் எம் போன்றோர் அவருடைய நினைவுகளைச் சுமக்கின்றோம்.

திங்கள், 14 மார்ச், 2011

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
University of Jaffna

யாழ் பல்கலைக்கழக சின்னம்

குறிக்கோள்'மெய்ப்பொருள் காண்பது அறிவு'
'Discernment is Wisdom'
நிறுவப்பட்டது1974
துணைவேந்தர்என். சண்முகலிங்கன்B.Ed.(Hons.)(Cey),M.A(Jaffna) Ph.D (Jaffna).
அமைவுதிருநெல்வேலி,யாழ்ப்பாணம்,இலங்கை
Enrollment5,000 undergraduate,
800 graduate
ஆசிரியர்கள்600
வளாகம்43 ஏக்கர் (174,000 மீ²)
இணையதளம்www.jfn.ac.lk

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் (University of Jaffna) இலங்கையிலுள்ள ஏழு பல்கலைக்கழகங்களுள் ஒன்று. யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகமொன்றின் தேவை நீண்ட காலமாகவே இருந்துவந்த போதிலும், 1974 ஆம் ஆண்டிலேயே இது நிறுவப்பட்டது. சேர். பொன். இராமநாதனால் நிறுவப்பட்ட பரமேஸ்வராக் கல்லூரியை மையமாக வைத்து இப்பல்கலைக்கழகம் இயங்கத் தொடங்கியது.

வரலாற்றுப் பின்னணி

இலங்கையின் தமிழர் வாழும் பகுதிகளில் பல்கலைக்கழகமொன்று இல்லாமை ஒரு பெருங் குறையாக இருந்துவந்தது. எனினும் இத்தகைய ஒரு பல்கலைக்கழகம் எங்கே நிறுவப்பட வேண்டுமென்பதில் தமிழர் பிரதிநிதிகளிடையே ஒத்தகருத்து நிலவவில்லை. இலங்கைத் தமிழர் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சி,திருகோணமலையிலேயே பல்கலைக் கழகம் நிறுவப்பட வேண்டுமென்று வாதிட்டுவந்தது. அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியினரும் வேறு சிலரும் யாழ்ப்பாணத்தில் இது அமையவேண்டுமென்றனர். இலங்கையின் தமிழர் பிரதேசத்தின் மத்திய பகுதியில் திருகோணமலை அமைந்திருப்பதும், தமிழர் பகுதியின் தலைமையிடமாகத் திருகோணமலையை வளர்த்தெடுக்கும் நோக்கம் இருந்ததும் தமிழரசுக் கட்சியினர் திருகோணமலையை அமைவிடமாக வலியுறுத்தி வந்ததற்கான காரணங்களிற் சில. திருகோணமலையில் குடித்தொகை அடிப்படையில் தமிழர் விகிதாசாரம் குறைந்துவருவதைத் தடுத்து நிறுத்தவும் இது உதவுமென அவர்கள் கருதினார்கள்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பெயர்ப்பலகை

அக்காலத்தில் யாழ்ப்பாண மாணவர்களே மிகப் பெரும்பான்மையாகப் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகினர். எனவே உடனடியாக யாழ்ப்பாணத்திலேயே பல்கலைக்கழகம் தேவை என எதிரணியினர் வாதாடியதுடன், திருகோணமலையின் குடித்தொகை நோக்கங்களைப் பொறுத்தவரை தமிழருக்குப் பாதகமான விளைவுகளே ஏற்படக்கூடும் எனவும் அவர்கள் எச்சரித்தார்கள்.

1965 ல் பதவிக்குவந்த ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசில், தமிழரசு, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே பங்காளிகளாக இருந்தும், தமிழர் பகுதியொன்றில் பல்கலைக்கழகமொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு சாதகமான நிலைமை இருந்தபோதிலும் கூட, தமிழரிடையே ஒத்தகருத்தின்மை காரணமாக எதுவும் நடைபெறவில்லை. 1972ல் இலங்கை சுதந்திரக் கட்சி வெற்றிபெற்றுசிறிமாவோ பண்டாரநாயக்கா பிரதமரான பின்னர். தமிழரசுக் கட்சியினரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் யாழ்ப்பாணத்தில் பல்கலைக் கழகமொன்றை நிறுவி 1974 ஆம் ஆண்டு திறந்துவைத்தார்.

அக்காலத்தில் இலங்கையிலிருந்த பல்கலைக்கழகங்கள் அனைத்தும் இலங்கைப் பல்கலைக் கழகம் என்ற ஒரே பல்கலைக்கழகத்தின் வெவ்வேறு வளாகங்களாகவே செயற்பட்டு வந்தன. எனவே யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழகமும், "இலங்கைப் பல்கலைக் கழகம், யாழ்ப்பாண வளாகம்" என்றே அழைக்கப்பட்டது. பின்னர் இவ் வளாகங்கள் அனைத்தும் தனித்தனியான பல்கலைக்கழகங்களான போது, யாழ்ப்பாண வளாகமும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஆனது.

[தொகு]வவுனியா வளாகம்

இதன் ஓர் வளாகம் வவுனியாவின் நகரப்பகுதியில் உள்ளது. குருமண்காட்டில் விஞ்ஞானபீடமும், ஆங்கில கறகைநெறிகளுக்கான பீடம் மின்சாரநிலையத்திற்கு அருகிலும் வணிகக் கல்விப் பீடமானது வவுனியா உள்வட்ட வீதியிலும் அமைந்துள்ளது. வவுனியாப் பீடத்திற்கான ஒருதொகை நிலப்பரப்பானது வவுனியா மன்னார் வீதியில் A30 (தேசப்படத்தில் வவுனியா பறையனாலங்குளம் வீதி என்றே காணப்படுகின்றபோதும் இப்பெயரானது பாவனையில் இல்லை) பம்பைமடுப் பகுதியில் சுமார் வவுனியா நகரத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் ஒதுக்கப்பட்டு விடுதியொன்றை நிர்மாணிக்கும் வேலைகள் தொடங்கியிள்ளபோதும் உள்நாட்டுப் பிரச்சினைகள் காரணமாக இங்கே வளாகத்தை மாற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாகவே காணப்படுகின்றன.

[தொகு]பிரிவுகளும் கற்கைத் துறைகளும்

  • விவசாயப் பிரிவு
  • கலைப் பிரிவு
  • பொறியியற் பிரிவு
  • முகாமைத்துவம் மற்றும் வர்த்தகப் பிரிவு
  • மருத்துவப் பிரிவு
  • விஞ்ஞானப் பிரிவு

[தொகு]யாழ் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரிகள்

[தொகு]யாழ் வளாகத் தலைவர்கள்

[தொகு]யாழ் பல்கலைக்கழக உபவேந்தர்கள்

[தொகு]

ஞாயிறு, 13 மார்ச், 2011

மீசாலை சாந்தினி கொலையுடன் வவு. துணை இராணுவக் குழுவினருக்கு தொடர்பு

கடந்த வாரம் தென்மராட்சி பிரதேசத்தின் மீசாலைப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கொலையுடன் வவுனியாவை தளமாகக் கொண்ட துணை இராணுவக் குழுவினருக்கு தொடர்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

கனடாவை வசிப்பிடமாகக் கொண்ட படுகொலை செய்யப்பட்ட சாந்தினி என்ற பெண்ணின் கணவர், தனது மனைவியை படுகொலை செய்வதற்கு வவுனியாவை தளமாகக் கொண்ட துணை இராணுவக் குழுவை சேர்ந்தவர்களை கூலிக்கு அமர்த்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

சங்கானையை சேர்ந்த 24 வயதான பெண்ணுடன் தொடர்புகளை பேணிவந்த குறிப்பிட்ட நபர், தனது மனைவியை கொலை செய்துவிட்டு, சொத்துக்களை கைப்பற்றவே முயன்றுள்ளார்.

சாந்தினி படுகெலை செய்யப்பட்ட வெள்ளை நிற வானில் பயணம் செய்த குறிப்பிட்ட பெண் தற்போது யாழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, இந்த கொலையுடன் தொடர்புள்ள வவுனியாவை தளமாகக் கொண்ட துணை இராணுவக் குழுவின் உறுப்பினரை உடனடியாக கைது செய்யுமாறு சாந்தினியின் படுகொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் நீதிபதி சிறீலங்கா பொலிஸாரை பணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

செவ்வாய், 8 மார்ச், 2011

மீசாலையில் கடத்தல், கொலையுடன் தொடர்புடைய பெண் சந்தேகநபர் கைது
[ புதன்கிழமை, 09 மார்ச் 2011, 02:24.24 AM GMT ]
யாழ். சாவகச்சேரி பிரதேசத்தில் மீசாலையில் அண்மையில் இடம்பெற்ற கடத்தல் மற்றும் பெண் படுகொலையுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் பெண்ணொருவர் நேற்று மாலை சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சந்தேநபர், சாவகச்சேரியிலிருந்து கொழும்பு நோக்கி தப்பிச் செல்ல முயற்சிக்கும் போது பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றுக்கமைய சாவகச்சேரி பொலிஸின் விசேட குழுவொன்று அவரைக் கைது செய்தது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன் அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே பெண்ணின் கணவரும் பெண்ணைக் கடத்திச் சென்ற வான் சாரதியும் கைது செய்யப்பட்டு நேற்று சாவகச்சோி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு எதிர்வரும் 18ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இதேவேளை, கொலையுண்ட பெண்ணின் பிரேத பரிசோதனையை மேற்கொண்ட யாழ்.சட்ட வைத்திய அதிகாரி அப்பெண் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் இரு சந்தேகநபர்களை பொலிஸார் தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

திங்கள், 7 மார்ச், 2011

மீசாலை கிழக்கில் வெள்ளை வானில் கடத்தப்பட்ட குடும்பப்பெண் சடலமாக மீட்பு


யாழ்ப்பாணம் மீசாலை கிழக்குப் பகுதியில் நேற்று வெள்ளை வானொன்றில் கடத்திச் செல்லப்பட்ட பெண் சாவகச்சேரி பெருங்குளம் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மீசாலை கிழக்கில் கணவரைவிட்டு பிரிந்து, உறவினர்களுடன் வாழ்ந்து வந்த குகதாஸ் சாந்தினி என்பவரே இவ்வாறு கடத்திக் கொலை செய்யப்பட்டுள்ளவராவார். இவரது கடத்தலுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் கணவரான குகதாஸ் நேற்று சாவகச்சேரியில் வைத்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வெள்ளை வானுடன் காவற்றுறையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டிருந்தார்
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது :
கனடாவில் இருந்து கடந்த மாத இறுதியில் சிறீலங்காவுக்கு வந்த கொலை செய்யப்பட்டவரின் கணவர் கொழும்பில் வெள்ளை நிற வான் ஒன்றை சாரதியுடன் வாடகைக்கு அமர்த்தியுள்ளார், பின்னர் வவுனியாவில் வேறு இருவரையும் அழைத்துக் கொண்டு மீசாலையிலுள்ள வீட்டுக்கு நேற்று வந்து வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதோடு, அங்கிருந்தவர்களை தடிகள் பொல்லுகள்ளால் தாக்கியுமுள்ளனர். அங்கிருந்தவர்கள் கூக்குரலிடவே வவுனியாவில் இருந்து வந்ததாகக் கூறப்படுபவர்கள் பிஸ்டலை பெண்ணின் மகனுடைய தலையில் வைத்து மிரட்டியதோடு அந்தப் பெண்ணையும், 8 வயதுடைய அவருடைய மகனையும் ஆயுத முனையில் இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றிச் சென்றனர் என்று அயலவர்கள் தெரிவித்தனர்.
சம்பவத்தையறிந்து உடனடியாக படையினரின் உதவியுடன் செயலில் இறங்கிய காவற்றுறையினர் சாவகச்சேரி புறநகர்ப் பகுதியில் சம்பந்தப்பட்ட வாகனத்தை மடக்கிப்பிடித்தனர். பிடிக்கப்பட்ட வேளை வானினுள் இருந்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் மகன் மீட்கப்பட்ட போதிலும், கடத்தப்பட்ட பெண் வானினுள் இருக்கவில்லை. அவ் வேளையில் வானில் இருந்த கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவரும், வாகனச் சாரதியும், வேறொரு பெண்ணும் காவற்றுறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
காவற்றுறை வாகனத்தை மடக்கிப் பிடித்த வேளை, வவுனியாவில் இருந்து வந்ததாகக் கூறப்படும் ஆயுததாரிகளும் தலைமறைவாகி இருந்தனர். இவர்கள் இருவரையும் தேடி நேற்று மாலை முழுவதும் காவற்றுறையினர் வலை விரித்திருந்தனர். அதே நேரம் காணாமற்போன சாந்தினியைத் தேடும் பணியையும் முடுக்கி விட்டிருந்தனர். ஆரம்பகட்ட விசாரணைகளின் போது சாந்தினியை ஒரு அடர்ந்த மரம் நிறைந்த பகுதியில் வானில் இருந்து கணவர் தள்ளி விட்டதாக மகன் கூறியதாகத் தெரியவந்திருந்தது.
இன்று காலை பெருங்குளம் பகுதியில் பெண் ஒருவருடைய சடலம் காணப்படுவதாகக் தகவல்கள் வெளியாகியிருந்ததைத் தொடர்ந்து கடத்தல் மற்றும் கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் காவற்றுறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதே வேளை சம்பவம் தொடர்பான மரண விசாரணையும் பிரேத பரிசோதனையும் இன்று பிற்பகல் யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
பிரேத பரிசோதனையில் மூச்சுத் திணறல் காரணமாகவே மரணம் சம்பவித்ததாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.
கொலை செய்யப்பட்ட பெண்ணை மூச்சடிக்கச்செய்து கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் கொலை செய்யப்பட்ட பின் முகத்தைச் சிதைத்து தீ மூட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்ததாகவும் ஆரம்ப கட்ட விசாரணைளில் இருந்து தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை -
கொலையுடன் தொடர்புடைய பலரது விவரங்கள் அம்பலத்துக்கு வந்துள்ளதாகவும், கொலையாளிகளுக்கு உடைந்தையாக செயற்பட்டவர்கள் முன்னாள் ஆயுதக்குழுக்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.